சிவபெருமான் அகத்தியருக்குத் தமிழை உபதேசித்தார் என்றும் அம்மொழியை அகத்தியர் உலகுக்குத் தந்தார் என்றும் கம்பராமாயணம் கூறுகிறது. இதையே "ஆதியில் தமிழ்நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகன்” எனச் சேனாவரையர் தொல்காப்பியம் உரையின் கடவுள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் இலக்கண அறிவுடையவர் என்றும் நக்கீரருக்கு இவரே இலக்கணத்தை அறிவுறுத்தியதாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அகத்தியத்தை இவரே எழுதியிருக்க முடியும் என்கிறார்கள். இந்நூல் 12,000 நூற்பாக்கள் கொண்டது என்று பலரும் கூறியுள்ளனர். முத்தமிழுக்கு இலக்கணம் கூறும் நற்றமிழ் நூலாக விளங்கும் தொல்காப்பியத்திற்கு மூல நூலாக இருந்தது அகத்தியமே என்கிறார்கள். அகத்திய வெண்பா, அகத்திய மணி 4000, உள்ளிட்ட 26 நூல்களை அகத்தியர் இயற்றியுள்ளார் என்றும் இவரது மனைவி லோபா முத்திரை என்றும் கூறுகிறார்கள். அகத்தியம் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு நூல் என்று சிலர் கூறியுள்ளனர்.
அருந்தவ முனிவன் ஆக்கிய முதனூல்
பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர்
நல்லிசை நிறுத்த தொல்காப் பியனும்"
என்கிறது பன்னிரு படலம் பெருந்தொகை 1387ஆம் செய்யுள். அகத்தியர் சந்தனப் பொதிகையில் செந்தமிழ் வளர்த்தவர் என்றும் கும்பமுனி என்றும், மனித நிலையில் இருந்து கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்டவர் என்றும் பாராட்டப் பெறுவதுண்டு. இவர் முதற் சங்கத்தின் தலையாயப் புலவர் என்று பலரும் குறிப்பிடுவதால் இவர் முதற்சங்க காலத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
![]() |
| அகத்தியர் |
இமயமலையில் அகத்தியர் வாழ்ந்த இடத்தில் "அகத்திய வடம்” என்றொரு தீர்த்தம் இன்றும் உள்ளது என்பார்கள். தெற்கே இவர் வாழ்ந்த பொதிகை மலையை "அகத்திய வசம்" என்று அழைக்கப்பெறுகிறது. நாசிக் எனும் ஊரில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ள "பஞ்சவடி" எனும் ஆசிரமத்தில் அகத்தியர் வாழ்ந்தார் என்று இராமாயணம் கூறுகிறது. தமிழ்நாட்டில் வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள அகத்தியப் பள்ளியில் அகத்தியர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. திருக்குற்றாலக் கோயிலை இவரே வெளிப்படுத்தினார். அதனால்தான் அக்கோயிலில் இவருக்குச் சன்னதி உண்டு என்கிறார்கள்.
அகத்தியர் வடக்கிலிருந்து தென்திசைக்கு வருகின்றபோது சிவபெருமானிடம் “தென்னாடு தமிழ் வழங்கு நாடு" என்பதால் எனக்குத் தமிழின் இலக்கணத்தை உணர்த்துக என வேண்டியுள்ளார். அகத்தியரின் வேண்டுகோளுக்கேற்ப, சிவபெருமான் எழுத்து, சொல், பொருள் முதலான இலக்கணத்தை அருளினார் என்ற செய்திகளைத் திருவிளையாடற் புராணம் கூறியுள்ளது.
அருள் செய்தாய் அருள்செய்த படியே செய்வல்
ஒதரும் தென்பூமி தமிழ்ப்பூமி என்பார்
ஒண்தமிழிற்கு உரியவெலாம் அடிமைக்கு இங்கே
போதமுற அறிவித்தல் வேண்டும் என்று
போற்றுங்கால் எழுத்துச் சொற்பொருள் முன்னான
நீதியுடைச் சூத்திரங்கள் அறியும் வண்ணம்
நெறியின் கண் அறிவித்தாய் நேசம் கூர்ந்தே"
இப்பாடல் பழைய திருவிளையாடல் புராணத்தில் உள்ளதாக கே.எஸ்.சீனிவாசப்பிள்ளை தமிழ் வரலாறு நூலில் கூறியுள்ளார். இதன்மூலம் அகத்தியர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே தமிம்மொழி தமிழகத்தில் வளர்ந்துள்ளது என்று கூறுவது தமிழ்மொழியின் தொன்மையை உணர்த்துகிறது.
சிவபெருமான் பார்வதி திருமணக் கோலத்தைத் தரிசிக்க முடியவில்லை என அகத்தியர் வருந்திய போது, சிவபெருமான் எங்களுடைய திருமணத்தை நீ அங்கிருந்தே காணலாம் என்று அருளினார் எனப் புராணங்கள் கூறியுள்ளன. நல்லூர், திருமணஞ்சேரி, திருவீழிமிழலை, ருத்ரகங்கை, அம்பல், திருமடைக்காடு, எடும்பாவனம், பாபவிநாசம் ஆகிய இடங்கள் அகத்தியர், சிவபெருமான் பார்வதி திருமணக் காட்சியைக் கண்ட இடங்களாக உ.வே.சாமிநாத ஐயர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் தென்னாட்டில் இருந்தபோது அவரின் கமண்டல நீரைக் காகம் கவிழ்த்துவிட அந்நீர்க் காவிரியாக ஓடியது என்று சிவப்பிரகாச சுவாமிகள் "பிரபுலிங்க லீலை" நூலில் குறிப்பிடுகிறார்.
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை"
என்கிறது மணிமேகலை கடவுள் வாழ்த்து 11, 12ஆம் அடிகள். அகத்தியர் தமிழன் என்பதோடு பாண்டிய மரபாகிய திங்கள் மரபைச் சேர்ந்தவன் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அகத்தியரின் மாணாக்கர்
அகத்தியரின் மாணாக்கர் 1.தொல்காப்பியர், 2. அதங்கோட்டாசான், 3. வாய்ப்பிகன், 4. செம்பூட்சேய், 5. தூராலிங்கன், 6. பனம்பாரன், 7. கழாரம்பன், 8. வையாபிகள், 9. அவிநயன், 10. காக்கைபாடினி, 11. வாமனன், 12. நற்றத்தன் ஆகியோர் ஆவர். இவர்கள் இயற்றிய நூலே பன்னிருபடலம் என்பதை
தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்
தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த
துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன்"
என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை சிறப்புப் பாயிரம். அகத்தியருக்குத் தொல்காப்பியர்தான் முதல் மாணவர் என்பது குறிப்பிடத் தக்கது.
அகத்தியம்
அகத்தியரைப் பற்றி பழங்கதைகள், சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், காஞ்சிப்புராணம், திருவிளையாடற் புராணம், போன்ற நூல்களில் கூறப்படுகின்றன. தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் அகத்திய நூற்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே
எள்ளின் எண்ணெய் எடுப்பது போல்
இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம்"
என்கிறது ஓர் அகத்திய நூற்பா, செய்யுள் நூல்கள் தோன்றிய பிறகே இலக்கண நூல்கள் எழுந்தன என்று கூறுகிறது. இது அகத்திய நூற்பா இல்லை என்பாரும் உண்டு.
அகத்தியரால் எழுதப்பட்ட அகத்தியம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், சோதிடம், காந்தருவம், கூத்து முதலியனவாகும். 12,000ஆயிரம் நூற்பாக்களைக் கொண்ட இந்நூல் முதல் சங்க, இடைச்சங்க நூல்களுக்கு இலக்கண நூலாகத் திகழ்ந்துள்ளது என அறியமுடிகிறது. கடைச்சங்க நூல்களுக்குத் தொல்காப்பியம் இலக்கண நூலாகத் திகழ்ந்தமையால் தொல்காப்பியத்திற்குப் பின் அகத்தியம் செல்வாக்கிழந்ததாகக் கூறுகிறார்கள். இப்போது அகத்தியம் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. உரையாசிரியர்கள் கையாண்ட சில நூற்பாக்கள் கிடைத்துள்ளன. அகத்தியம், தொல்காப்பியத்திற்கு முன் பழந்தமிழ் இலக்கண நூலாக இருந்தது எனும் கருத்து உறுதியானது.
அகத்தியர் எனும் பெயரில் பலர் பலகாலக்கட்டங்களில் பல இடங்களில் வாழ்ந்துள்ளார்கள் என்ற கருத்தும் உண்டு. இவர்களில் சிலர் தமிழர், சிலர் ஆரியர் என்றும் குறிப்பிடுகிறார்கள். அகத்தியம் இயற்றிய அகத்தியர் தமிழ்மொழியில் இலக்கண இலக்கியப் புலமையும் நிறைந்த அறிவும் கொண்டவர் என்பது மட்டும் தெளிவாகிறது.
தொகுப்புரை
தொல்காப்பிய நூற்பாவில் என்மனார் புலவர் எனறு தொல்காப்பியர் கூறியிருப்பது அவருக்கு யாரோ ஒருவர் தமிழ்மொழியைக் கற்றுக் கொடுத்துள்ளார் என்றும் தொல்காப்பியருக்கு முன்பே தமிழ்மொழி மக்கள் பயன்பாட்டில் இருந்தது என்றும் உணரமுடிகிறது.தமிழ் மொழியின் இவ்வரலாற்றை உரிய இலக்கியச் சான்றுகளுடன் யாரும் மறுத்ததாகத் தெரியவில்லை. மறுத்தவர், தமிழ்மொழியின் பிறப்பு வரலாற்றையும் தொல்காப்பிய என்மனார் புலவர் என்பதையும் உரிய இலக்கிய சான்றுகளுடன் விளக்கியதாகத் தெரியவில்லை. எனவே தமிழ்மொழி அகத்தியர் வழி வந்தது என்பதை ஏற்பதில் தவறில்லை.
CURRENT AFFAIRS தேதி வாரியாக பார்க்க விரும்புகிறீர்களா
Current Affairs (Click here)
கருத்துகள்
கருத்துரையிடுக