நூலமைப்பு
மதுரை கூலவணிகன் சீத்தலைச்சாத்தனார் எனும் பௌத்த சமயத்தார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் மணிமேகலை காப்பியத்தை இயற்றியுளளார். தமிழில் தோன்றிய முதல் சமயக்காப்பியமான மணிமேகலை 4286 அடிகளில் 30 காதைகளாக அமைந்துள்ளது. காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்துள்ள இந்நூல் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியே என்பார்கள். மாதவியின் மகள் மணிமேகலையை அருந்தவப்படுத்தும் முயற்சியே மணிமேகலை காப்பியத்தின் நோக்கமாகும். மணிமேகலை மூலக்கதையோடு தொடர்புடைய 100 கதைகளில் 72 புராணக் கதைகளும் 22 வரலாற்றுக் கதைகளும் 06 நாட்டுப்புறக் கதைகளும் இடம்பெற்றுள்ளன என்கிறார்கள்.
கதையமைப்பு
பெண்ணின் பெயரில் அமைந்த முதல் காப்பியம். கோவலன் கொலை செய்யப்பட்டான் என்ற செய்தியறிந்த மாதவியும் மணிமேகலையும் பௌத்த சமயத் துறவியானார்கள். புத்த பிரானுக்கு மலர் வேண்டி மலர்வனம் நுழைந்த மணிமேகலை மீது காதல் கொண்ட உதயகுமாரன் அவளைப் பின் தொடர்ந்தான். தன்னைப் பொருள் விளையாட்டி என்று இகழ்ந்து பேசினாலும் உதயகுமாரனின் பின் தன்மனம் செல்வதை நினைத்து மணிமேகலை வருந்துகிறாள். இந்நிலையில் மணிமேகலா எனும் தெய்வம், மணிமேகலையை மணிப்பல்லவத் தீவிற்கு அழைத்துச் சென்றது. அங்குப் பழம்பிறப்பு அறிந்து மூன்று மந்திரங்களை மணிமேகலை தெரிந்து கொள்கிறாள்.
கோமுகி பொய்கையில் இருந்த ஆபுத்ரனின் அமுதசுரபி மணிமேகலைக்குக் கிடைக்கிறது. தன் மந்திரத்தின் உதவியால் விண்ணகத்தில் பறந்து புகார் நகரை மணிமேகலை அடைந்தாள். அங்குப் பசியால் வாடியோர்க்கு உண்டிகொடுத்து உயிர்கொடுத்தாள். உதயகுமாரன் தரும் துன்பங்களைத் தன் மந்திரத்தின் உதவியால் நீக்க காயசண்டிகையாக மணிமேகலை வடிவம் எடுத்தாள். காயசண்டிகையின் கணவன் காஞ்சனனால் உதயகுமாரன் தவறுதலாகக் கொல்லப்பட்டான்.
அரசனின் மகனைக் கொன்றதாகக் காரணம் கூறி மணிமேகலையைச் சோழ அரசன் சிறையில் அடைத்தான். மகனைப் பறிகொடுத்த அரசி மணிமேகலைக்குப் பலவகையில் துன்பம் கொடுத்தாள். தனது தவவலிமையால் மணிமேகலை சிறையில் இருந்து விடுபடுகிறாள். உண்மையை உணர்ந்த அரசி தன்னை மன்னிக்குமாறு வேண்டுகிறாள். பின்னர் மணிமேகலை காஞ்சி சென்று பௌத்த மதக் கொள்கையைப் பரப்பி அறவண அடிகளிடம் ஆசிபெறுகிறார் எனக் கதை முடிகிறது.
மணிமேகலை எழுந்த சூழல்
சிலப்பதிகாரத்தின் இறுதி அடியை மணிமேகலை மேல் உரைபொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் என்று இளங்கோவடிகள் கூறியுள்ளதால் சிலப்பதிகாரத்தின் தொடர் நிகழ்வாகவே மணிமேகலை அமைந்துள்ளது என்று அறிய முடிகிறது. இளங்கோவடிகளும் மதுரைக் கூலவணிகன் சீத்தலைச் சாத்தனாரும் சமகாலத்தவர் என்பதால் இருவரும் கலந்துரையாடியே மணிமேகலையைச் சீத்தலைச்சாத்தனார் இயற்றியதாகக் கூறுகிறார்கள். கோவலன் மாதவி மகள் மணிமேலையின் குமரிப் பருவம் முதல் புத்தசமய தவநிலை போராட்டங்கள் வரை அனைத்து நிகழ்வுகளையும் விளக்குவதாக நூல் அமைந்துள்ளது. மணிமேகலை நூல் அரங்கேற்றத்தின் போது இளங்கோவடிகள் அருகமர்ந்து கேட்டார் என்பதை
வளங்கெழ கூலவாணிகன்சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு
ஆறுஐம் பாட்டினுள் அறிய வைத்தனன் என்”
என்று மணிமேகலைப் தெளிவுபடுத்துகின்றன. பதிகம் 95-98ஆம் அடிகள் மணிமேகலை என்பதால் அப்பெயரையே தன் மகளுக்குக் கோவலன் கோவலன் குலதெய்வத்தின் பெயர் சூட்டியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிமேகலை கூறுவன
மணிமேகலையில் பண்டைத் தமிழகத்தின் வளத்தினையும் நாகரிகத்தையும் காண முடிகிறது. நகரங்களில் இருந்த வீடுகளில் இடம் பெற்றிருத்த கண்கவர் சிற்பங்களும் ஒவியங்களும் அவர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக மணிமேகலை கூறியுள்ளது. மணிப்பல்லவம், சாவகம், இரத்தினதீவம், காஞ்சிநகர், வஞ்சிநகர், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய செய்திகளும் அங்கு நடைபெற்ற தொழில்களும் மணிமேகலையில் விளக்கப்பட்டுள்ளன.
சமயக் கொள்கைகளையும் ஆதிரை, விசாகை, மருதி ஆகிய பத்தினிப் பெண்களின் தகவல்களையும் மணிமேகலை காப்பியம் தெளிவுபடுத்தியுள்ளது. கணிகையர் குலப் பெண்கள் கலை வல்லுநர்களாக இருந்தாலும் குற்றம் செய்தால்! ஏழு செங்கற்களைத் தலையில் சுமந்து ஊரை வலம்வரும் தண்டனை அவர்களுக்கு வழக்கப்பட்டதாக மணிமேகலையில் அறிய முடிகிறது.
மறவாது இதுகேள் மன்உயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல் எனக் காவலன் உரைக்கும்”
என்கிறது மணிமேகலை 25ஆம் காதையின் 228-231ஆம் அடிகள், மனித வாழ்க்கையில் இளமை, இன்பம், செல்வம், யாக்கை ஆகியன நிலையாமை எனக் கூறி அறம் செய்ய வேண்டும் என மணிமேகலைப் பாடல்கள் உணர்த்துகின்றன. பசியொழிப்பு, பரத்தையொழிப்பு, மதுவொழிப்பு, சாதியொழிப்பு, சிறையொழிப்பு ஆகியவற்றை மணிமேகலை வற்புறுத்துகிறது.
சிறப்புகள்
* தமிழ் இலக்கியங்களில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை.
* காப்பியத் தலைவியின் பெயரால் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் மணிமேகலை.
* பரத்தையர் குலத்தைச் சேர்ந்த சித்ராபதியின் மகள் மாதவியின் மகளைக் காப்பியத் தலைவியாகக் கொண்ட நூல்.
* மடக்கணி, சிலேடையணியைப் பயன்படுத்தியுள்ள முதல் காப்பியம் என்ற பெருமை பெற்றுள்ள நூல்.
* தமிழ்த்தாயின் நடுநாயகமாக விளங்கும் இடையை அலங்கரிக்கும் அணிகலன் மணிமேகலை.
* மணிமேகலை காப்பியத்தில் சொல் ஓசையும் இலக்கிய நயமும் எளிமையாக அமைந்துள்ளது.
* எப்போதும் எவ்வுயிர்களிடத்தும் அன்பாய் இரு என்பது அரசமாதேவிக்கு மணிமேகலை கூறிய அறிவுரையாகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக