ஆசிரியர் அறிமுகம்
அந்தகக் கவிஞரான வீரராகவ முதலியார் கண்பார்வையற்றவர் ஆவார். இவர் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள பூதூரில், வடுகநாதருக்கு மகனாகப் பிறந்தார். செவியறிவால் இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்தார். பார்வையற்றவராகப் பிறந்து, இளமையிலேயே கவி இயற்றும் ஆற்றல் பெற்றவராதலால் அந்தகக்கவி எனப்பட்டார். நகைச்சுவையாகவும் சிலேடையாகவும் பாடல் எழுதுவதில் வல்லவர். ஒருவர் மனதில் உள்ளதை மற்றொருவர் தன் மனதால் கண்டுணர்ந்து கூறுகின்ற 'கண்ட சித்தி' என்ற ஆற்றலைப் பெற்றவர். ஈழநாட்டு மன்னன் பரராசசேகரன் மனதில் இருந்த இரு கேள்விகளுக்குப் பாடல் பாடி விடை கூறினார். இவர் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மனதில் ஆழமாகப் பதியக் கூடிய சொற்றொடர்களைக் கொண்டு சுதந்திரமாகப் பாடிய தனிப்பாடல்கள் இன்றும் அனைவரது மனதிலும் எழுச்சியினை ஏற்படுத்தும். இவர் பாடிய முதல் நூல், திருக்கழுக்குன்ற புராணம் ஆகும். 'ஏட்டில் எழுதாமல் தன் மனதில் படித்த விரகன்' என வீரராகவரைப் புகழ்வர். இவர் இயற்றிய நூல்கள், திருக்கழுக்குன்ற புராணம், கழுக்குன்ற மாலை, சந்திரவாணன் கோவை, திருவாரூர் உலா, சேயூர்க் கலம்பகம், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், கயத்தாற்றரசனுலா போன்ற பிரபந்தங்கள் ஆகும். கம்பராமாயணத்தைத் தெளிவாகக் கற்றவர். சீட்டுக்கவி பாடுவதில் திறம் பெற்றவராகத் திகழ்ந்தார். கச்சியப்ப சிவாச்சாரியார், "பலகலை மானெய்திடப் போய் கவியினால் இசை பெற்றானே" என வீரராகவரைப் புகழ்கிறார். கடல்கடந்து சென்று கவிமணம் பரப்பிய கவிஞராக அடையாளப்படுத்தப்படுகிறார். வீரராகவர் இறந்தபோது கயத்தாற்றரசர் போன்ற பலர் இரங்கற்பா எழுதியதாக அபிதான சிந்தாமணி கூறுகிறது.
நூல் அறிமுகம்
பல்வேறு புலவர்களால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு 'தனிப்பாடல் திரட்டு ' என்ற நூலாக 1862 ஆவது ஆண்டு வெளிவந்தது. ஒவ்வாரு பாடலுக்குப் பின்னால் ஒரு நிகழ்வுக் கதை இருப்பதைக் காணலாம். கட்டுப்பாடின்றி புலவர்களால் சுதந்திரமாகப் பாடப்பட்ட பாடல்களாகத் தனிப்பாடல்கள் திகழ்கின்றன. தமிழ்மொழியை விரும்புபவர்கள் சுயமாக வாசிக்கக்கூடிய சிறந்த பாடல்கள் அடங்கிய நூல் தனிப்பாடல் திரட்டு எனலாம். அந்நூலில் வீரராகவ முதலியாரால் எழுதப்பட்ட பாடல்களும் அடங்கியுள்ளன. இவரது 37 பாடல்கள், தனிப்பாடல் திரட்டு நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக அமைந்த பாடல் 'இம்பர்வான் எல்லை இராமனையே பாடி..."என்பதாகும்.
சிறந்த பொருள் நயமிக்க பாடலாக இது திகழ்கிறது. தமிழில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் உள்ளதை உணர்த்தும் பாடலாக இது விளங்குகிறது. வீரராகவ முதலியார். ராமன் என்ற செல்வந்தரைச் சந்தித்துப் பாடல் பாடினார். ராமன் மகிழ்ச்சியோடு பாடலை ரசித்துவிட்டுப் பரிசாக யானை ஒன்றினை வழங்குகிறான். கவிஞரோ ஏழ்மையில் வாடுகிறார். அவருக்கான உணவிற்கே போராட வேண்டிய சூழலில் யானையை வீட்டிற்கு அழைத்துச் சென்று என்ன செய்வது என சிந்தித்தார். வேறுவழியின்றி யானையை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மனைவியோ, கவிஞர் கொண்டு வரும் பரிசுப் பொருளுக்காகக் காத்திருக்கிறாள். கவிஞர் வந்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி 'என்ன பரிசு கொண்டு வந்தீர்கள்' என்பதாகும். கவிஞருக்கோ யானை மட்டுமே பரிசாகக் கிடைத்தது எனக் கூறுவதற்கு மனதில்லை. மனைவியின் மனம் நோகாமல், வீட்டின் வெளியில் இருந்தபடியே பதில் கூறுகிறாள். யானை என்ற சொல்லிற்குரிய வேறு சொற்களைக் கூறிப் பாடுகிறார். அறிவாற்றல் மிகுந்த மனைவியும் வேறு பொருள் புரிந்து கொண்டு பதில் மொழி பேசுகிறார். இந்நிகழ்வின்போது வீரராகவரால் பாடப்பட்ட பாடலே இப்பாடலாகும். இப்பாடலின் விளக்கத்தையும் சிறப்பையும் 'என்ன கொணர்ந்தாய் பாணா நீ' என்ற தலைப்பில் காணலாம்.
பாடல்
இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாங் களபமென்றேன் பூசுமென்றாள்.
மாதங்கமென்றேன் யாம் வாழ்ந்தோமென்றாள்
பம்புசீர் வேழமென்றேன் தின்னுமென்றாள்
கம்பமா என்றேன் நற்களியா மென்றாள்
கைமா என்றேன் சும்மா கலங்கினாளே.
பாடல் பொருள் விளக்கம்
பண் இசைத்துப் பாடுகின்ற பாணன் ஒருவன். ராமன் என்ற வள்ளலைச் சந்தித்துப் பாடல் பாடி பரிசு பெறுகிறான். அவனுடைய மனைவி பாணினி, வீட்டின் வறுமையைப் போக்கக் கணவன் கொண்டு வருகிற பொருளைப் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறாள். பாணனும் வீடு வந்தும் பதில் ஏதும் பேசவில்லை. உடனே தலைவி பேசத் தொடங்குகிறாள்.
வானளவு புகழ்கொண்ட, இம்மண்ணில் வாழும் வள்ளலிடம் உனது திறமைகளைக் காட்டி என்ன பரிசு வாங்கி வந்தாய்?
"களபம் வழங்கினார்' என்கிறான் பாணன். 'சந்தனமா? நாம் சந்தனம் பூசிக்கொள்ளும் நிலைமையிலா இருக்கிறோம். அதை நீயே பூசிக்கொள்' என்கிறாள் பாணி. களபம் என்ற சொல்லிற்குச் சந்தனம் என்ற பொருளும் உண்டு. உடனே பாணன், "ஐயோ இல்லை, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அவர் தந்தது மாதங்கம்" என்றான்.
"ஓகோ, நமது நிலையைப் புரிந்து கொண்டு நிறைய தங்கம் வழங்கினாரா வள்ளல்? இனி கவலை இல்லை. நன்றாக வாழலாம்" என்றாள் பாணி.
"மாதங்கம் என்றதும் நீ தங்கம் என நினைத்தாயோ! இல்லையில்லை. அவர் தங்கம் தரவில்லை. வேழம் தந்தார்" என்றான் பாணன்.
"ஐயோ கரும்புதான் தந்தாரோ! நீ பாடிய பாடல் திறமைக்குத் தகுதியானது கரும்பு தானோ! அதை நீயே தின்று கொள்" என்றாள் பாணி.
'வேழம் என்றதும் கரும்பு எனத் தவறாகப் புரிந்து கொண்டாய். அவர் கரும்பு தரவில்லை. வள்ளல் தந்தது கம்பமா" என்று பாணன் கூறினான்.
"உன் கவித்திறனுக்குக் கம்பின் மாவுதான் கிடைத்ததோ! என்ன செய்ய? அதனைக் கொண்டு களி செய்து சாப்பிடலாம்" என ஆறுதலடைகிறாள் பாணி.
உடனே பாணன், 'தவறாகவே புரிந்து கொள்கிறாய். அவர் கம்பினுடைய மாவினைத் தரவில்லை. வள்ளல் அளித்த பொருள் கைம்மா' என்றான்.
அதனை உணர்ந்து கொண்ட பாணி, "ஐயோ,யானையா தந்தார். நமக்கே உணவில்லை. யானைக்கும் சேர்த்து உணவு கொடுக்க என்ன செய்வது?" எனக் கலங்கி நின்றாள்.
எள்ளல் சுவையான பாடலாக அமைந்து உரையாடல் அமைப்பில் பாடப்பட்ட இப்பாடலானது அழகோவியமாகத் திகழ்கிறது.
பாடலின் சிறப்பு
யானையைக் குறிக்கின்ற வேறு சொற்களான களபம், மாதங்கம், வேழம், கம்பமா, கைம்மா போன்றவை முறையே சந்தனம், பெரிய தங்கம், கரும்பு. கம்பின் மாவு, யானை ஆகிய பொருள்களையும் குறிக்கும் என்பதை இப்பாடல் கூறுகிறது.
பாணன் யானையைக் குறிக்கின்ற பிற சொற்களைக் கூறிக்கொண்டே வர, பாணி அச்சொற்களுக்கான வேறு பொருளைக் கூறிக்கொண்டே வருகிறாள்.
அந்தகக் கவியான வீரராகவ முதலியார், யானையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கிறார். ஒரு பொருள் பல சொல் என்று இலக்கணம் கூறுவதற்குச் சான்றாக இப்பாடல் திகழ்கிறது.
யானை என்ற பொருளைக் குறிக்கக் களபம், மாதங்கம், வேழம், கம்பமா. கைம்மா போன்ற பல சொற்கள் தமிழில் இருப்பதை இப்பாடல் நினைவுறுத்துகிறது.
வள்ளல் கொடுத்த அன்புப் பரிசானது. தனக்குத் தேவைப்படாத பொருளாயினும், மறுக்காமல் ஏற்றுக் கொண்ட பாணனின் நற்பண்பு இங்குத் தெரிகிறது. மேலும், வறுமையென்றாலும் உதவி செய்பவர்களிடம் மீண்டும் உதவி கேட்காமல் வழங்கியதை ஏற்றுக்கொண்ட மனப்பக்குவத்தையும் இப்பாடல் வழியாக உணர முடிகிறது.
ஏற்கனவே, பல வள்ளல்களைச் சந்தித்து விலைமதிப்பு மிக்கப் பரிசுகளைப் பெற்று வந்தாலும் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுக்கும் வழக்கம் பாணர்களிடம் இருந்தது. எனவே அவர்கள் வறுமையிலேயே வாழ்க்கை முழுவதும் வருந்தி வாழ்கின்றனர் என்பதற்கு இப்பாடல் ஒரு சான்றாக அமைகிறது.
யானையாகிய விலங்கினைக் குறிக்க ஐம்பதிற்கும் மேற்பட்ட சொற்கள் தமிழர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வளவு பெயர்களுக்கு இடம்கொடுக்கும் செம்மையான மொழி தமிழ்மொழி என்பதும் தமிழர்களின் அறிவுத்திறன் வியப்பிற்குரியது என்பதும் வீரராகவ முதலியார் பாடலில் உறுதியாகிறது.
SEO Keywords:
Veeraraghava Mudaliar poem summary, Tamil devotional poem, Rama devotional song in Tamil, Imbar Vaan Ellai Raamanaiye Paadi meaning, classical Tamil poetry, Tamil religious poems, bhakti poems in Tamil, spiritual Tamil literature, Tamil poem on Lord Rama, Veeraraghava Mudaliar works, Tamil devotional lyrics.

கருத்துகள்
கருத்துரையிடுக